search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூடுதல் கமிஷனர்"

    விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்ப்பவர்களுக்கு உரிய சட்ட பாதுகாப்பு வழங்கப்படும் என்று சென்னை போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் அருண் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். #Accident #LegalProtection
    சென்னை:

    சென்னை போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் அருண் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    விபத்துகள் ஏற்படும் போது பலர் அருகில் இருந்தாலும், விசாரணை மற்றும் வழக்குகளில் சேர்க்கப்பட்டு பல சிரமங்களுக்கு ஆளாக நேரிடுமோ என தவறாக கருதிக்கொண்டு விபத்துகள் பற்றிய தகவலை தெரிவிக்கவும், காயம் அடைந்தவர்களுக்கு உதவி செய்யவும், பொதுமக்கள் தயக்கம் காட்டுகிறார்கள். இதனால் பெரும்பாலான விபத்துகளில் உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் உயிரிழப்பு ஏற்படுகின்றன.

    இதுபோன்ற தவறான கருத்துகளை களையவும், விபத்து குறித்து தகவல் தருபவர்களையும், காயம் அடைந்தவர்களுக்கு உதவி செய்பவர்களையும் எந்தவித இன்னலுக்கும் ஆளாக்காமல் சட்டப்படி பாதுகாக்கவும், சுப்ரீம்கோர்ட்டு ஆணையின்படி அரசு உரிய விதிமுறைகளை வகுத்துள்ளது. சாலை விபத்து ஏற்படும்பொழுது அருகில் இருப்பவர் அல்லது அந்த விபத்து நடந்த இடத்தை கடந்து செல்பவர்கள், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தாமாக முன்வந்து உதவிசெய்யும் நபர் அல்லது நபர்கள் இதன் மூலம் பாதுகாக்கப்படுவார்கள்.



    * விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிசெய்ய முன்வரும் நபர்கள் பாதிக்கப்பட்டவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்துவிட்டு சென்றுவிடலாம். அவர்களிடம் வேறு எந்த கேள்வியும் கேட்கப்பட மாட்டாது. விபத்தை நேரில் பார்த்தவர் முகவரியை மட்டும் தெரிவித்துவிட்டு செல்லலாம்.

    * விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்க்கும் பாதிக்கப்பட்டவரின் உறவினர் அல்லாத உதவி செய்யும் நபர்களை, சுப்ரீம்கோர்ட்டு ஆணை மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, சம்பந்தப்பட்ட தனியார் மற்றும் அரசு மருத்துவமனை நிர்வாகம் மருத்துவ சிகிச்சைக்கு அல்லது பதிவுக்கு தேவையான பணத்தை செலுத்த கட்டாயப்படுத்தக்கூடாது. மேலும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை வழங்க மறுத்தால், மருத்துவ அதிகாரி ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்.

    * விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிசெய்ய முன்வரும் நபர்கள், பெயர் மற்றும் தனிப்பட்ட தகவல்களை மருத்துவமனைக்கு தெரிவிப்பது, சம்பந்தப்பட்ட நபரின் விருப்பத்துக்கு உட்பட்டதாகும். மேலும் உதவிசெய்யும் நபர்கள் விபத்து தொடர்பான எந்தவித சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளுக்கு பொறுப்பாக மாட்டார்கள்.

    * சாலை விபத்துகள் குறித்த தகவல்களை காவல்துறை அல்லது காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கும் நபர்கள், தங்களது தனிப்பட்ட தகவல்களை தெரிவிக்கத்தேவையில்லை. தனிப்பட்ட தகவல்களை தெரிவிக்குமாறு கட்டாயப்படுத்தும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உதவிசெய்யும் நபர்களை விபத்து வழக்கில் சாட்சியாக இருக்கும்படி கட்டாயப்படுத்தமாட்டார்கள். அது அவரின் விருப்பத்தை பொருத்தது. மேலும் அந்த நபரை தேவையில்லாமல் காவல்துறையினர் காத்திருக்கும்படியும் கட்டாயப்படுத்தமாட்டார்கள்.

    * விபத்து வழக்குகளில் தாமாக முன்வந்து சாட்சியாக இருக்க சம்மதிக்கும் நபர்களை விசாரணை அதிகாரிகள் போலீஸ் நிலையத்திற்கு வரும்படி கட்டாயப்படுத்த மாட்டார்கள். மாறாக மேற்படி நபரின் இல்லம் அல்லது அவர்கள் விரும்பும் இடத்திற்கு விசாரணை அதிகாரி சாதாரண உடைகளில் சென்று மிகுந்த மரியாதையுடன் ஒருமுறை மட்டுமே விசாரணை மேற்கொள்வார்கள்.

    இந்த விசாரணையானது குற்றவிசாரணை முறை சட்டம் பிரிவு 284 மற்றும் 296 ஆகிய பிரிவுகளுக்கு உட்பட்டு மேற்கொள்ளப்படும். கூடுமானால் ‘வீடியோ கான்பரன்ஸ்’ முறை பயன்படுத்தப்படும். எனவே பொதுமக்கள் சாலை விபத்துகள் குறித்த தகவல்களை காவல் துறைக்கு உடனுக்குடன் தெரிவிக்கவேண்டும் எனவும், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவித தயக்கமுமின்றி உதவிசெய்து விலைமதிப்பில்லாத மனித உயிர்களை காப்பாற்ற ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு கூடுதல் கமிஷனர் அருண் தெரிவித்துள்ளார். #Accident #LegalProtection

    சென்னை கபாலீசுவரர் கோவிலில் மரகத மயில் சிலை கையாடல் செய்யப்பட்ட வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் திருமகள் கைது செய்யப்பட்டார். #KapaleeshwararTemple
    சென்னை:

    தமிழக கோவில்களில் இருந்து திருடப்பட்டு பழமையான சிலைகள் கடத்தப்பட்ட வழக்குகளை விசாரிக்க ஐ.ஜி. பொன் மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக சென்னை ஐகோர்ட்டு நியமித்துள்ளது. அவர் ஓய்வுபெற்ற நிலையில் மேலும் 1 ஆண்டுக்கு அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

    பொன் மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்து ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட்டும் மறுத்துவிட்டது. இந்தநிலையில் ஏற்கனவே சிலை கடத்தல் வழக்குகளில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள பொன் மாணிக்கவேல் மீண்டும் அதிரடி நடவடிக்கைகளை தொடங்கி உள்ளார்.

    காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சோமாஸ்கந்தர் தங்க சிலையை போலியாக செய்த வழக்கில் இந்து அறநிலையத்துறை அதிகாரி கவிதா கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் உள்ளார்.

    இந்தநிலையில், மற்றொரு பெண் அதிகாரியான இந்து அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் திருமகளும் (வயது 53) நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். சென்னை கபாலீசுவரர் கோவிலில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான மரகத மயில் சிலை மற்றும் ராகு, கேது சிலைகள் கையாடல் செய்யப்பட்டதாக திருமகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

    கடந்த 2004-ம் ஆண்டு கபாலீசுவரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கபாலீசுவரர் கோவில் வளாகத்தில் புன்னைவனநாதர் சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் மிகவும் அரிதான மரகதத்தால் செய்யப்பட்ட மயில் சிலை ஒன்று இருந்தது.

    பார்வதிதேவி மயில் வடிவில் வந்து ஈஸ்வரனுக்கு மலர்களால் பூஜை செய்த காட்சியை நினைவுபடுத்தும் வகையில் அந்த மரகத மயில் சிலை அமைக்கப்பட்டிருந்தது. மயில் சிலையின் வாயில் மலர்கள் இருப்பது போன்று அந்த பழமையான சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது.

    அந்த சிலை சேதமடைந்துவிட்டதாக கூறி, கடந்த 2004-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றபோது, புதிதாக செய்யப்பட்ட மயில் சிலை அங்கு வைக்கப்பட்டது. பழமையான மரகத மயில் சிலை அகற்றப்பட்டது. அந்த சிலையோடு சேர்த்து ராகு, கேது சிலைகளும் சேதமடைந்ததாக கூறி அகற்றப்பட்டன. ராகு, கேது சிலைகளும் புதிதாக வைக்கப்பட்டன.

    பழமையான மரகத மயில் சிலையின் வாயில் மலர்கள் இருப்பதுபோன்ற தோற்றம் காணப்பட்டது. ஆனால் புதிதாக வைக்கப்பட்ட மயில் சிலை வாயில் மலர்களுக்கு பதில் பாம்பு இருப்பது போன்ற தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டது.

    இவ்வாறு புதிய சிலைகள் வைக்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறி, ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜ நரசிம்மன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு போலீசார் விசாரணை நடத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    அதன்பேரில் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு போலீசார் இந்த வழக்கை விசாரித்தனர். ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் சென்னை கபாலீசுவரர் கோவிலுக்கு 2 முறை சென்று விசாரணை நடத்தினார்.

    2004-ம் ஆண்டு கபாலீசுவரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றபோது, தற்போதைய அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் திருமகள் நிர்வாக அதிகாரியாக இருந்தார். திருமகளிடமும் விசாரணை நடைபெற்றது.

    ராகு, கேது சிலைகளை மாற்றுவதற்கு சிபாரிசு செய்த முத்தையா ஸ்தபதியிடமும் விசாரணை நடந்தது. 2004-ம் ஆண்டு அப்போது இந்து சமய அறநிலையத்துறை கமிஷனராக இருந்த தனபாலிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    விசாரணைக்கு பிறகு திருமகள், முத்தையா ஸ்தபதி, தனபால் உள்ளிட்ட சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணையின்போது திருமகள் பல்வேறு தவறான தகவல்களை போலீசாரிடம் கூறியதாக தெரிகிறது.

    புன்னைவனநாதருக்கு திருப்பணியே நடைபெறவில்லை என்று திருமகள் கூறியதாக தெரிகிறது. மேலும் புன்னைவனநாதர் சன்னதியையே நான் பார்க்கவில்லை என்றும், சிலை மாற்றப்பட்டதற்கும், தனக்கும் தொடர்பு இல்லையென்றும் போலீஸ் விசாரணையில் திருமகள் கூறினாராம்.

    ஆனால் புன்னைவனநாதர் சன்னதியிலும் திருப்பணிகள் நடந்ததற்கான வீடியோ ஆதாரத்தை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர். அந்த வீடியோ காட்சியில் புன்னைவனநாதருக்கு நடந்த திருப்பணியில் அதிகாரி திருமகள் கலந்துகொண்டது கண்டறியப்பட்டது.

    மேலும் திருப்பணிகள் நடந்தது தொடர்பான ஆவணங்களை கேட்டபோது அவற்றை அழித்துவிட்டதாகவும் திருமகள் பதில் அளித்தார். மாற்றப்பட்ட பழமையான மரகத மயில் சிலையும், ராகு, கேது சிலைகளும் எங்கே போனது? என்று இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    அந்த சிலைகளை பூமிக்குள் புதைத்துவிட்டதாக கோவில் அர்ச்சகர்கள் சிலர் கூறினார்கள். ஆனால் அதிலும் உண்மை இல்லை என்று சந்தேகம் உள்ளது.

    மாற்றப்பட்ட மரகத மயில் சிலைகள் உள்ளிட்ட 3 சிலைகளும் வெளிநாட்டிற்கு கடத்தி செல்லப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு உள்ளது. அதுபற்றி விரிவான விசாரணை நடக்கிறது.

    இந்தநிலையில் சிலைகள் மாற்றப்பட்ட விவகாரத்தில் உண்மைகளை மூடி மறைத்த குற்றத்திற்காகவும் அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் திருமகளை நேற்று அதிகாலையில் சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டில் வைத்து ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட திருமகள் போலீஸ் வேனில் ஏற்றப்பட்டு கும்பகோணம் சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து செல்லப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முத்தையா ஸ்தபதி, தனபால் ஆகியோர் முன்ஜாமீன் பெற்றுவிட்டனர்.

    மயில் சிலையை மாற்ற சிபாரிசு செய்த கேரள ஜோதிடர் ஒருவரையும் இந்த வழக்கில் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். #KapaleeshwararTemple

    ×